Nagaratharonline.com
 
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம்  Jul 16, 11
 
சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் சரகம் மந்தவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள வேதாசலம் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 30) ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாச்சாள் (26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மதுர வள்ளியம்மை என்ற மகள் இருக்கிறாள். அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். சொக்கலிங்கம் தினமும் காலையில் வேலைக்கு போய்விடுவார். நாச்சாள் பகல் 11 1/2 மணிக்கு வேலைக்கு போய்விட்டு இரவு தான் வீடு திரும்புவார். நாச்சாள், தினமும் வேலைக்கு போகும் முன்பு குழந்தை மதுரவள்ளியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டுப்போவார். அருகில் உள்ள தெருவில்தான் அவரது பெற்றோரும் தங்கையும் வசிக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் குழந்தை மதுரவள்ளியை பெற்றோர் அழைத்துவந்துவிடுவார்கள். இரவில் நாச்சாள் வந்தபிறகு வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். நாச்சாள் வேலைக்குச் செல்லும் முன்பு அவரது தங்கையிடம் தினமும் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று அது போல் நாச்சாளிடமிருந்து செல்போன் அழைப்பு வரவில்லை. இதனால் அவரது தங்கை செல்போனில் பேச முயற்சித்தார். செல்போன் சுவிட் ஆப் என்று வந்தது. இதனால் அவர் வேலை பார்க்கும் வங்கிக்கு போன் செய்து கேட்டார். `நாச்சாள் வேலைக்கு வரவில்லை' என்று பதில் சொன்னார்கள்.

இதனால் சந்தேகம் கொண்ட தங்கை, நாச்சாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கண்ட காட்சியால், தங்கை கதறி அழுதார். நாச்சாள் கட்டிலுக்கு கீழே மூச்சுப்பேச்சுஇல்லாமல் கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவருக்கு உயிர் இருக்கலாம் என்று கருதி, உடனடியாக அவரை இசபெல்லா மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

நாச்சாள் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவரது கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ஏராளமான நக கீறல்கள் இருந்தன. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் போலீசார் இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். நாச்சாளின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன், துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் ரவி சங்கர், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீஸ் படையினர் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான கொலைகாரனின் கை ரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் அக்னி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடியது.

வீட்டு சமையல்காரி மற்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தைப்பார்வையிட்டபிறகு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் 2 வளையல்கள் காணாமல் போயிருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருந்த காது ஜிமிக்கி அப்படியே உள்ளது. பீரோவில் சாவி உள்ளது. ஆனால் அதற்குள் இருந்த நகைகளும் ரொக்கப்பணமும் அப்படியே இருக்கின்றன.

இதனால் நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று உறுதியாக சொல்லமுடியாது. தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். சில தடயங்கள் சிக்கியுள்ளன. குற்றவாளி விரைவில் பிடிபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன் கூறும்போது, `கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார். இந்த சம்பவம், மந்தைவெளி பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கி அதிகாரி நாச்சாள், `ஆசை` சினிமா பட பாணியில் மூச்சு திணறடிக்கப்பட்டு மிகவும் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளார்.

ஆசை சினிமா படத்தில் பிரகாஷ் ராஜ் அவரது மனைவி ரோகிணியை கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி நூதனமான முறையில் கொலை செய்வார். அதே பாணியில் நாச்சாளையும், கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் கொலைகாரன் இறுக்கி கட்டியிருந்தான். நாச்சாள் துடி துடித்தபடி நீண்டநேரம் போராடி உயிரை விட்டிருக்கவேண்டும். அவர் வேலைக்குச் செல்வதற்காக டிபன் பாக்சில் சாப்பாடு கட்டிவைத்திருந்தார்.

பக்கத்தில் உள்ள தெருவில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதாக தெரிகிறது. அந்த வீட்டில் கார்பெண்டர் வேலை செய்யும் நபர் செல்போனில் பேசி நாச்சாளை பார்க்கவருவதாக கூறியிருக்கிறார். இப்போது அந்த கார்பெண்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

Latest Update

மந்தைவெளி மார்க்கெட் பகுதி வேதாச்சலம் கார்டன் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் சொக்கலிங்கத்தின் மனைவி நாச்சாள். அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வந்த இவர் நேற்று பட்டப்பகலில் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரை மர்ம ஆசாமி கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடி விட்டான்.

நாச்சாள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, வளையல்கள் மட்டும் கொள்ளை போயிருந்தது.

கொலை செய்யப்பட்ட வங்கி அதிகாரி பகலில் வீட்டில் இருப்பதை தெரிந்தவர்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கொலையாளி விரைவில் சிக்கி விடுவான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகை, தடயங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது. சொக்கலிங்கம் வீட்டிற்கு வந்து போக கூடியவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தப்பட்டதில் தச்சு தொழிலாளி ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாச்சாள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மரவேலைகளை அவர்தான் செய்துள்ளார். எதிரே உள்ள வீட்டு வேலையை செய்த அதே கார்பெண்டரைதான் இவரும் நியமித்துள்ளார். அந்த வீட்டில் நேர்த்தியான மர வேலைகளை அவர் செய்திருந்ததால் அவருக்கு இந்த வேலையை சொக்கலிங்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சந்தேகப்படும் தச்சு தொழிலாளியின் போனிற்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

நாச்சாளின் செல்போனை காணவில்லை. அதை கொலையாளி எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அந்த போனில் யார்? யார்? பேசினார்கள். யாருக்கு அவர் கடைசியாக பேசி இருக்கிறார் போன்ற தகவல்கள் தெரிந்தால் கொலையில் துப்பு துலங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது போன் சிக்காததால் அந்த போன் நிறுவனத்தில் பதிவாகி உள்ள எண்களை பெற போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

அந்த பட்டியலின் மூலம் கொலைக்கான காரணம், கொலையாளி யார்? என்பது தெரிந்து விடும். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கார்பெண்டர் இருக்கும் இடத்தை தேடி வருகிறார்கள். கார்பெண்டர் சிக்கினால் உண்மை தெரிந்து விடும்

Source:Maalaimalar