Nagaratharonline.com
 
பிளஸ் 2 கணித தேர்வு வினாத்தாளில் அச்சுப்பிழை; 32 மார்க்குகள் இனாம்  Apr 18, 11
 
பிளஸ் 2 கணித பாட வினாத்தாளில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க, அரசு உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, 32 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என, திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி, அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. இத்தேர்வில், கணித பாட மாணவர்கள், வினாத்தாளில், ஏராளமான அச்சுப்பிழை இருந்ததாக தெரிவித்தனர். அச்சுப் பிழையால், கேள்விகளை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என, மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இது குறித்த விவரம் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு சென்றது.
இதையடுத்து, பிளஸ் 2 கணித பாட வினாத்தாளில் (தமிழ் மீடியம்) ஒரு மார்க் (பாகம் ஏ) கேள்வி எண்கள் 12, 13, 20, 26 மற்றும், 6 மார்க் கேள்வி எண்கள் 41, 47, 51, கேள்வி எண் 70ல் கேட்ட 10 மார்க் கேள்வி, அச்சுப்பிழையுடன் இருந்தன. இதனால், மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொள்வதில் சிரமம் அடைந்தனர். இக்கேள்வி எண்களை எழுதி, ஓரளவு விடை எழுதிய மாணவர்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டது. ஆங்கில மீடிய மாணவர்களுக்கும், 31 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



source ; Dinamalar