Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்  Mar 23, 11
 
திருப்பரங்குன்றத்தில் நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது. இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.கோயிலில் மார்ச் 11ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனித் திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார்.

நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு, கோயில்முன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரில், பரிவட்டங்களுடன் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். கோயிலில் கருப்பண சுவாமிக்கு பூஜை, தீபாராதனை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சார்யார் சுவாமிநாதன் வெள்ளை துண்டு வீசியவுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலை 6.30 மணிக்கு நிலையிலிருந்து தேர் புறப்பட்டது. நான்கரைமணிநேரம் கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டத்தில் தேர் நகர்ந்து சென்று கோயில்முன்பு நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று பகல் 12 மணிக்கு சரவணப்பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

source ; Dinamalar