Nagaratharonline.com
 
காரைக்குடியில் புத்தகத் திருவிழா: பிப்.11 தொடங்கி 20 வரை நடைபெறுகிறது  Feb 8, 11
 
காரைக்குடி, பிப். 7: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகத் திருவிழா பிப்.11-ம் தேதி துவங்கி, 20-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, புத்தகத் திருவிழாக் குழுத் தலைவர் பேராசிரியர் அய்க்கண் கூறியதாவது:

காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் 9-வது ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பதிப்பகத்தார், புத்தக விற்பனையாளர்கள் அரங்குகளை அமைக்கின்றனர்.

"தினமணி'யின் அரங்கும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகிறது. 45 அரங்குகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை புத்தகத் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பிப். 11-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் துவக்க நிகழ்ச்சிக்கு நான் தலைமை வகிக்கிறேன்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடக்க உரையாற்றுகிறார்.

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் இலக்கிய உரையாற்றுகிறார்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம. ராமசாமி சிறப்புரையாற்றுகிறார்.

காரைக்குடி "செக்ரி' இயக்குநர் வி. யக்ஞராமன், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது. சொக்கலிங்கம், புத்தகத் திருவிழாக் குழுத் துணைத் தலைவர் பி.வி. சுவாமி, அமைப்பின் பொருளாளர் வி. வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

புத்தகத் திருவிழா அமைப்புச் செயலாளர் முத்து. பழநியப்பன் வரவேற்கிறார். அமைப்பின் துணைத் தலைவர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் நன்றி கூறுகிறார்.

விழா நாள்களில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Source:Dinamani