Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டி: டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கிராம மக்கள் மறியல்  Feb 3, 11
 
புதுக்கோட்டை, பிப். 3-

புதுக்கோட்டை அருகே நற்சாந்துபட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அரசு ஆஸ்பத்திரி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் பெண்களிடம் கலாட்டா செய்து வருவதாக புகார்கள் வந்தன.

மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாதர் சங்க தலைவி சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துகுமரன் உள்பட நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் மறியலில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இன்று காலை நடந்த இந்த திடீர் மறியலால் புதுக்கோட்டை -திருமயம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Source:Maalaimalar