Nagaratharonline.com
 
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த தின விழா  Nov 9, 10
 
காரைக்குடி, நவ. 7: காரைக்குடியில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1989-ம் ஆண்டு முதல் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த நாள் விழா நவம்பர் மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அழகப்பா மெட்ரிக் பள்ளிக் குழந்தைகள் அழ. வள்ளியப்பா படைப்புகளில் இருந்து பாடல்கள், நாடகம், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நேரு குறித்த விநாடி-வினா நிகழ்ச்சியை உமையாள் நடத்தினார். கவிமணி குழந்தைகள் சங்க உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற இயற்கை என்னும் தலைப்பிலான கவியரங்கிற்கு கவிஞர் கா. நாகப்பன் தலைமை வகித்தார்.

விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் மு. பாண்டி, பேராசிரியர் சே. குமரப்பன், புலவர் மெய்யாண்டவர், கவிஞர்கள் இ.ஜே. தீன், மழபாடி ராஜாராம், தொழில் அதிபர் கீழச்சீவல்பட்டி ராஜேந்திரன், அலெக்ஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிகளை கவிஞர் பால. நடராஜன் தொகுத்து வழங்கினார்.

காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் பி.வி. சுவாமி, ரோட்டரி பிரமுகர் தேனப்பன், செல்வி பதிப்பகம் வீர. சிவராமன், பேராசிரியர்கள் மாணிக்கம், மெ. மெய்யப்பன், நா. வள்ளி, ஆ. தெக்கூர் விசாலாட்சி கலாசாலைத் தலைமையாசிரியர் அசோகன், காரைக்குடி தமிழிசைச் சங்கச் செயலர் வி. சுந்தரராமன், தேவகி மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன் வர வேற்றார். ஏற்பாடுகளை குழந்தைக் கவிஞர் குடும்பத்தினர் செய்திருந்தனர். நாச்சியப்பன் நன்றி கூறினார்.


Source:Dinamani