Nagaratharonline.com
 
டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி  Oct 30, 10
 
சென்னை-மேற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கே.வி.கார்த்தலிங்கன் டிரைவிங் லைசென்ஸ், விலாச மாற்றம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

நிரந்தர உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தனி விண்ணப்பம் உண்டா?

நிரந்தர உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தனி விண்ணப்பம் உள்ளது. உரிய கட்டணத்தைச் செலுத்தி, பழகுனர் உரிமம் வழங்கப்பட்ட விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய வாகனம் ஓட்டும் திறனும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்படும். வாகனத்துக்குரிய பதிவுச் சான்றிதழ், இன்ஷ்யூரன்ஸ், பொல்யூஷன் சர்டிஃபிகேட் போன்றவற்றையும் காட்ட வேண்டும். வாகனம் உங்கள் பெயரில் இல்லாதபட்சத்தில், வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து, தமது வாகனத்தை அளித் திருப்பதாக ஒரு சான்றிதழும் அவசியம்.

அதிகாரி, வாகனம் ஓட்டும் திறனைப் பரிசோதனை செய்து, டிரைவிங் குறித்த சில கேள்விகளையும் கேட்பார். அவருக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க சிபாரிசு செய்வார். இதில் தேறாமல் போனவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதுதான்.

பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனப் பிரிவிற்கான நிரந்தர உரிமம் வழங்கும்போது, உங்களுடைய ஐம்பதாவது வயது வரை செல்லத்தக்க வகையில் அது அளிக்கப்படும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ அதிகாரியின் சான்றிதழின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப்படும்.

தற்போது ஆன் லைனிலேயே விண்ணப்பம் செய்யும் வசதி வந்து விட்டது என்றாலும், பதிவுசெய்யும்போதே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு எல்லா ஒரிஜினல் டாகுமென்ட்களுடன் குறித்த நேரத்தில் நேரில் செல்ல வேண்டியது அவசியம்.

பழகுனர் உரிமம் பெற்ற ஒருவர் நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

பழகுனர் உரிமம் பெற்ற முப்பது நாட்களில் அவர் சாலை விதிகளை நன்றாகப் புரிந்துகொண்டு, வாகனம் ஓட்டிப் பழகி, நெரிசல் மிகுந்த இடங்களிலும், வாகனத்தை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற வேண்டும். (பதினாறு வயதானவர்கள் 50 சி.சி.க்குக் குறைவான திறன் கொண்ட கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெறலாம் என்று சென்ற இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம்) பொதுவாக நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய உரிமம் வழங்கும் அலுவலகத்தில்தான் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் டிரைவிங் பயிற்சிப் பள்ளியின் மூலமாக பயிற்சி பெற்றவர் என்றால் அவர்கள் ஸ்கூல் மூலமாகவே உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கும், டிரைவிங் ஸ்கூல் மூலமாக விண்ணப்பிக்கிறவர்களுக்கும் படிவம் 4, படிவம் 5 என்று தனித்தனி விண்ணப்பங்கள் உண்டு. நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெற இப்போது நிர்ண யிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூபா அறுபது.

விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டியது.

1.உங்களுடைய பழகுனர் உரிமம்.

2.நீங்கள் ஓட்டிக் காட்டப்போகும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்.

3.அந்த வாகனத்தின் இன்ஷ்யூரன்ஸ்

4.மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்.

5.வாகன உரிமையாளரிடமிருந்து, அந்த வாகனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் கடிதம்.

6.ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம்.

நகல்கள் சரிபார்க்கப்பட்டதும் அன்றைய தினமே, உங்கள் புகைப்படம் கொண்ட, லேமினேஷன் செயப்பட்ட ஓட்டுனர் உரிமம் உங்கள் கைக்கு வந்துவிடும்.

டிரைவிங் தேர்வில் தோற்றுவிட்டால், மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுமா?

நிச்சயமாக வழங்கப்படும். ஒருமுறை ஓட்டுனர் தேர்வில் தவறிவிட்டால், ஏழு நாட்கள் கழித்து அவர் மீண்டும் தேர்வு எழுதலாம். அப்போதும் தவறிவிட்டால், மூன்றாவது முறையும் ஒரு வாப்பு உண்டு. மூன்றாவது முறையும் தவறிவிட்டால், அடுத்தது ஒரு வருடத்துக்கு பிறகுதான் அவர் மீண்டும் தேர்வுக்கு வரலாம். இந்த ஓராண்டுக் காலத் தில் அவர் மீண்டும் பழகுனர் உரிமத்துக்கு விண்ணப்பித் துப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவரது வசிப்பிட விலாசம் மாறும்போது, புதிய விலாசத்தை ஓட்டுனர் உரிமத்தில் பதிவு செய்வது எப்படி?

ஓட்டுனர் உரிமம் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணம் என்பதால், அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி சான்றாக மட்டுமின்றி, பல்வேறு இதர விஷயங்களுக்கும் மிகவும் உபயோகமாக உள்ளது. உதாரணமாக நீங்கள் அதை ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாகப் பயன்படுத்தமுடியும். டிரைவிங் லைசென்சில் உங்களுடைய சரியான வசிப்பிட விலாசம் இடம்பெற்று இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

உங்கள் முகவரியில் மாற்றம் இருப்பின், அதற்குரிய ஆதாரத்துடன் விண்ணப்பித்து, புதிய முகவரியுடன் கூடிய ஓட்டுனர் உரிமத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். புதிய முகவரியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், எல்.ஐ.சி. பாலிசி, வீட்டு வரி ரசீது போன்றவற்றை ஆதாரமாக அளிக்கலாம். இப்படி ஏதும் இல்லை என்றால், ரேஷன் கார்டு, வீட்டு வரி ரசீது, டெலிஃபோன் பில் போல ஏதாவது ஒன்றை ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் சான்றாக அளித்து, அவரிடமிருந்து புதிய முகவரிக்கான அஃபிடவிட் வாங்கியும் இணைக்கலாம்.

உள்ளூர் முகவரியாக இருந்தாலும் வேறு பகுதியாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.

வேறு மாநிலத்துக்குப் போகிறபோது, அங்கே புதிய லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

அவசியமில்லை. முகவரி மாற்றத்துக்குரிய நடைமுறையையே கடைபிடித்தால் போதும். ஆனால், இந்த மாநிலத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரியை அணுகி, தடையில்லா சான்றிதழ் (நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட்) வாங்க வேண்டும். போகிற மாநிலத்தில் உங்கள் புதிய வசிப்பிடத்துக்குரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இந்த என்.ஓ.சி.யுடன் விண்ணப்பித்தால், அவர்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்குக் கடிதம் எழுதி, ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, புதிய லைசென்ஸ் வழங்குவார்கள்.

டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதெப்படி?

உங்களுக்கு எதற்காக நகல் லைசென்ஸ் தேவைப்படுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கி, விண்ணப்பிக்கவேண்டும். லைசென்ஸ் தொலைந்து போயிருந்தால், அதற்காக காவல்துறையினரிடம் புகார் அளித்து, அவர்களிடமிருந்து டிரைவிங் லைசென்ஸை தேடித்தர முடியவில்லை என்பதற்கான சான்றிதழைப் பெற்று, அதனையும் விண்ணப்பத்துடன் இணைத்து, சம்பந்தப்பட்டவரே நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் இப்போது 55 ரூபாயாக உள்ளது. நீங்கள் விண்ணப்பிக்கும் தினத்தன்றே டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.

ஒருவர் வாகனம் ஓட்டும் போதெல்லாம் அவரது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸைக் கையிலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமா? நகல் பிரதியை கையில் வைத்துக் கொண்டால் போதாதா?

மோட்டார் வாகனச் சட்டப்படி, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுனர் உரிமத்தை வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் ஓட்டுனர் உரிமத்தைக் கேட்கும் அதிகாரி, நம்பிக்கையின்பேரில் பிரதியை ஏற்றுக்கொண்டால் பிரச்னை இல்லை. அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வீட்டில் இருக்கிறது; நாளை அதைக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்" என்று சொல்லலாம். அதை அவரும் ஏற்றுக் கொள்ளக்கூடும்

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், வாகன வரி தொடர்பான விளக்கங்கள் அடுத்த இதழில்).

source : Mangaiyar Malar