Nagaratharonline.com
 
அரசு பஸ் தாமதம்: பயணிக்கு ரூ. 16 ஆயிரம் நஷ்டஈடு  Oct 28, 10
 
சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர்களாக பணியாற்றி வருபவர் ஜெ.ராஜேந்திரன். இவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் மதுரையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய 14 டிக்கெட் வாங்கி இருந்தார்.

அதற்கான கட்டணம் ரூ. 2,730 செலுத்தினேன். அல்ட்ரா டீலக்ஸ் பஸ் மதுரையில் இருந்து 8.20 மணிக்கு சரியாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நாங்கள் சென்றுவிட்டோம். ஆனால் அந்த பஸ் வரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு இன்னும் 15 நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்றனர். ஆனால் இரவு 11 மணி வரை பஸ் வரவில்லை. நான் குழந்தைகளுடன் பஸ்சுக்காக காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று மனுவில் கூறியிருந்தார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு மற்றொரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் கூடுதலாக ரூ. 864 கொடுத்துவிட்டு குடும்பத்துடன் பயணம் செய்து மறுநாள் பிற்பகல் சென்னை வந்தடைந்தேன்.

குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு விரைவு பஸ் வராததால் நான் அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை. என்னுடைய குழந்தைகள் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. எனவே எனக்கு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

போக்குவரத்து கழகம் தரப்பில், போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை. கூடுதல் வசதியுடன் கூடிய மற்றொரு அல்ட்ராடீலக்ஸ் பஸ்சில் பயணம் செய்வதற்காக கூடுதல் கட்டணம் பெறப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும் நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர். மோகன்தாஸ் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பயணி மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அவருக்கு நஷ்டஈடாக போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ. 16,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

source : Malai malar