Nagaratharonline.com
 
போக்குவரத்து நெரிசலால் திணறும் தேவகோட்டை  Sep 12, 10
 
தேவகோட்டை,செப்.11: முகூர்த்த நாள்களில் நடந்து செல்ல இயலாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலால் தேவகோட்டை திணறி வருகிறது.

தேவகோட்டை நகரின் பிரதான வீதி திருப்பத்தூர் சாலைதான். இதில் பஸ் நிலையம் இருப்பதால் ராமேசுவரம் பகுதியிலிருந்து தொண்டி, ஓரியூர், காளையார்கோவில் பகுதிகளிலிருந்து வருகிற வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் காரைக்குடி, திருச்சி பகுதிகளுக்குச் செல்லவேண்டும். மணல் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் லாரிகளும் இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் சாதாரண நாள்களிலும் காலை மாலை வேளைகளில் சிவன் கோயில் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

முகூர்த்த நாள்களில் நடந்து செல்லவே இயலாத அளவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே, லாரி உள்ளிட்ட வெளியூர் செல்லும் வாகனங்களை சிவன் கோயிலில் இருந்து கண்டதேவி சாலை வழியாகவோ அல்லது ஒத்தக்கடையிலிருந்து காந்தி ரோடு வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வகையிலோ திருப்பி விட்டால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

Source:Dinamani