Nagaratharonline.com
 
விரும்பும் மொபைல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் திட்டம் அக்.31 ல் அமல்  Aug 12, 10
 
வருகிற அக்டோபர் 31 முதல், மொபைல் போன் வைத்திருப்பவர்கள் தங்களது சேவை நிறுவனத்தை மாற்றினாலும் அதே எண்களே நீடிக்கும் திட்டம் அமலாகிறது.

ஏற்கனவே இந்த சேவையை ஜூன் 30 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் கெடு விதித்த நிலையில், அச்சேவையை அமல்படுத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், கெடுவை நீட்டிக்குமாறு செல்போன் சேவை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்றும், வருகிற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் அதே எண்களிலேயே, விரும்பிய செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஜே.எஸ். ஷர்மா இன்று தெரிவித்தார்.

மேலும் அக்டோபர் 31 க்குள் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்காத செல்போன் சேவை நிறுவனங்கள், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் எந்த ஒரு புதிய வர்த்தக சேவைகளையும் தொடங்க தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

source : Webdunia