Nagaratharonline.com
 
தேவகோட்டை அருகே சம்பவம் வட்டிக்கடை அதிபரை கொலை செய்ய முயற்சி  May 28, 10
 
தேவகோட்டை, மே. 13-


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த புளியடி தம்மம் அருகே உள்ள சீனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் செட்டியார் (வயது70). இவரது மகன் லட்சுமணன் (52). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகள் வரை மலேசியாவில் தங்கி தொழில் செய்து வந்தனர். தற்போது சீனமங்கலம் கிராமத்தில் வட்டிக்கடை வைத்துள்ளனர். இவர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த மற்றும் வெளியூர் நபர்கள் ஏராளமானோர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த லட்சுமணன் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்து வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 2 “மர்ம” ஆசாமிகள் திடீரென லட்சுமணனின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினர். உடனே லட்சுமணன் கூச்சல் போட்டார். இதைக் கேட்டு அவரது தந்தை மாதவன் செட்டியார் ஓடி வந்தார். அதற்குள் அந்த கும்பல் மாதவன் செட்டியாரை அரிவாளால் வெட்டுவதற் காக பாய்ந்து வந்தது.

லட்சுமணனும் மாதவன் செட்டியாரும் சேர்ந்து அந்த கும்பலை கம்பு மற்றும் கட்டைகளால் அடித்து துரத்த முயன்றனர். ஆனாலும் கொள்ளை கும்பல் தந்தை மகன் இரு வரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1983-ம் ஆண்டு இதே மாதவன் செட்டியார் வீட்டில் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி சரோஜா ஆச்சியை கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
கடந்த வாரம் தேவகோட்டை அருகே வட்டிக்கடையில் வேலை பார்த்து வரும் ரவீந்திரன் என் பவரை கொலை செய்த “மர்ம” கும்பல் அவரிடம் இருந்து வட்டிக்கடை பீரோ சாவியை பறித்து சென்றது. தேவகோட்டை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

Source:Maalaimalar