Nagaratharonline.com
 
ஆண்டுக்கு ரூ.559 செலுத்தி ₹15 லட்சம் விபத்து காப்பீடு : அஞ்சல் துறை அழைப்பு  May 3, 24
 
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் Rs.520/Rs.559/Rs.799 பீரீமியத்தில், ₹10 லட்சம்/₹15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி , வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ரூ.10 லட்சம் / 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்). ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி. தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி. விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை.

விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.100000/- வரை. விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.100000/- வரை. விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 60 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்) வழங்கப்படும்.

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.9000 வரை. ஆண்டிற்கு வெறும் ரூ.520/ரூ.559-ல்/ரூ.799-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.