Nagaratharonline.com
 
6 மணிநேரம் தான்.. சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்  Apr 7, 23
 
நாட்டில் 12வது வந்தே பாரத் ரயில் சேவை நாளை தொடங்க உள்ளது. இந்த ரயில் மூலம் சென்னை, கோவை இடையே பயணிகள் 5.50 நிமிடங்களில் பயணம் செய்யலாம். அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20644/20643) இயங்க உள்ளது.

இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதன் கிழமை தவிர பிற நாட்களில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில்கள் இருமார்க்கமாக சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது.

ரயிலில் உணவுடன் சேர்த்து ஏசி சேர் கார் பெட்டிக்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1,215 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உணவுடன் சேர்த்து எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,310 ஆக நிர்ணயம் உள்ளது. உணவு வேண்டாம் என்றால் ஏசி சேர் கார் பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.1,057 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உணவின்றி எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.2,116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.