Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த சூரசம்ஹாரம்  Sep 14, 21
 
பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மற்றொரு சப்பரத்தில் சூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரனை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரருடன், வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடன் வந்த கற்பகவிநாயகர் இரவு 7.10 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.