Nagaratharonline.com
 
NEWS REPORT: ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு: சென்னையை புயல் தாக்கும்  Apr 15, 21
 
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நேற்று பகல் 12 மணி அளவில் கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-

புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும். எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலை உயரும். கல்விக் கட்டணமும் உயரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களின் மென் பொருள் விலை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்.