Nagaratharonline.com
 
காரைக்குடியில் ஜவுளி அதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை  Nov 16, 19
 
காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென்று விட்டு அவர்கள் நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர்.

வீட்டின் கதவை திறக்க முயன்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இளங்கோமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

வீட்டின் 6 அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் கொள்ளை நடைபெற்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து இளங்கோமணி காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருணுக்கு தகவல் கொடுத்தார். அவர் வடக்கு காவல் நிலைய போலீசாருடன் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் இளங்கோமணி தெரிவித்தார்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.