Nagaratharonline.com
 
ஹெல்மெட் அபராத கட்டணத்தை உயர்த்த ஐகோர்ட் உத்தரவு  Jun 12, 19
 
சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹெல்மெட் விவகாரத்தில் மீண்டும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். 'ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என்றனர்.

இந்நிலையில், ஹெல்மெட் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அபராதத்தை அதிகரிக்க பிறப்பித்த அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிமீறினால் அபராதம் விதிக்கும் அதிகாரம், போக்குவரத்து உள்பட அனைத்து சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.