Nagaratharonline.com
 
பாகனேரி– துருவம்பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்  Nov 20, 18
 
பாகனேரியில் இருந்து துருவம்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. பாகனேரி இருந்து துருவம்பட்டி வழியாக செல்லும் சாலையில் மூக்கான்பட்டி, ஆலவிழாம்பட்டி, சடையன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பாகனேரி–துருவம்பட்டி செல்லும் 2 கிலோ மீட்டர் தூரமுடைய சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது.

முக்கியமான ஆன்மீக தலமான பட்டமங்கலத்தில் இருந்து கண்டுபட்டி, நாட்டரசன் கோட்டை செல்வதற்கு இந்த சாலை அதிக அளவில் பயன்படுகிறது. பாகனேரியில் இருந்து சொக்கநாதபுரத்திற்கு போக்குவரத்து தடைபடும் போதும், பாகனேரியில் இருந்து கல்லல் செல்வதற்கும் இந்த சாலை மிகவும் பயன்படுகிறது. மேலும் பணிகளுக்காகவும், பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் பாகனேரி, மதகுபட்டிக்கு செல்ல இந்த சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், ஆட்டோ உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் இங்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வரவேண்டியுள்ளது. இதே நிலை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்க, பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்