Nagaratharonline.com
 
நெற்குப்பையில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஊழியர் பலி  Nov 20, 18
 
நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 35). நெற்குப்பை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார். இவர்களது வீடு ஓட்டு வீடு ஆகும்.

மழைநீர் வீட்டுக்குள் ஒழுகும் என்று கருதிய எலிசபெத்ராணி, இன்று அதிகாலை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலிசபெத் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான எலிசபெத் ராணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் முறையே 6-ம் வகுப்பும், 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.