Nagaratharonline.com
 
NEWS REPORT: வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்  Oct 3, 18
 
ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில் ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த வேண்டும். ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ப்யூஸை பொருத்த வேண்டும். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக் காப்பாற் றும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க வேண்டும்.

ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு போகக்கூடாது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது. ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும்.