Nagaratharonline.com
 
விரைவு ரயில் பெட்டிகளில் முன்பதிவு பெயர் பட்டியல் ஒட்டும் முறை இனி இல்லை:  Oct 2, 17
 
ரயில் பெட்டிகளில் முன்பதிவு பெயர் பட்டியல் ஒட்டும் முறை நேற்று முதல் கைவிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை நேற்று முதல் கைவிடப்பட்டது. முதல் நாளான நேற்று பயணிகள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் சிலர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், ரயில்களில் பயணிகளின் முன்பதிவு பட்டியல் ஒட்டுவது நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிர்வாகம் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், திடீரென இந்த முடிவு எடுத்துள்ளது பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளும் வெளியிடவில்லை” என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள், “சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே துறை இந்த புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. சென்டரல், எழும்பூர், உட்பட 4 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் பயணிகள் முன்பதிவு பட்டியல் இனி இருக்காது என்றனர்.