Nagaratharonline.com
 
NEWS REPORT: மண்,, நீர்நிலை பார்த்து குடியேறிய நகரத்தார்கள்  Nov 10, 16
 
தினமலர் நாளிதழில் வந்த செய்தி :

பல நுாற்றாண்டுக்கு முன்பே செட்டிநாட்டு நகரத்தார்கள், தங்கள் வசிப்பிடத்தை மண், நீர்நிலை பார்த்து குடியேறியுள்ளனர்.
சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் நகரத்தார்கள். வணிகத்தில் சிறந்து விளங்கிய அவர்கள் கடல் சீற்ற பாதிப்பு போன்ற காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்தனர். அவர்கள் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 ஊர்களில் குடியேறினர்.

தற்போது நாட்டரசன்கோட்டை, பாகனேரி, சோழபுரம், ஒக்கூர், கண்டரமாணிக்கம், வெற்றியூர், பட்டமங்கலம், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், பனங்குடி, செம்பனுார், தேனிப்பட்டி, தேவகோட்டை, ஆறாவயல், ராங்கியம், காரைக்குடி, கண்டனுார், கோட்டையூர், ஓ.சிறுவயல், கொத்தமங்கலம், பள்ளத்துார், புதுவயல், கோ.அழகாபுரி, கானாடுகாத்தான், கண்டனுார், அரியக்குடி, ஆத்தங்குடி உள்ளிட்ட 74
ஊர்களில் வசிக்கின்றனர்.

இந்த பகுதிகள் பலத்த மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காதவாறு சரளை, செம்மண்ணால் ஆனவை. அதேபோல் நீர் சுனைகள் நிறைந்தவை.
முன்னாள் நபார்டு துணை பொது மேலாளர் கண்ணப்பன் கூறும்போது: தற்போது விலை அடிப்படையிலேயே இடம் வாங்குகின்றனர். அப்பகுதியில் நன்னீர், நீர் செறிவு, மண் வளம் இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை. ஆயிரம் ஆண்டுக்கு முன்பே அவற்றை ஆராய்ந்து குடியேறியவர்கள் நகரத்தார்.

இன்றும் அவர்கள் வாழும் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது. அவர்கள் நிலத்தடி நீரை சேமிக்க ஊரணி, மழைநீர் சேமிப்பு முறைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அதேபோல் நீர் வெளியேறும் கால்வாய்களுடனே வீடுகளையும் அமைத்தனர், என்றார்.