Nagaratharonline.com
 
ராங்கியம் : வி.என்.சிதம்பரம் வீட்டில் கொள்ளை: 6 பேருக்கு ஜெயில்  Apr 1, 10
 
மதுரை மீனாட்சியம்மன்கோயில் முன்னாள் தக்கார் விஎன்.சிதம்பரத்தின் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 6 பேருக்கு தலா 5 வருடம் ஜெயில் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் வி.என்.சிதம்பரம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்னாள் தக்கார். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். ராங்கியத்தில் உள்ள இவரது வீட்டிற்கு 17-9-02 அன்று இரவு காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த காவலாளி மற்றும் சமையல்காரரை தாக்கினர்.பின்னர் அவர்களை கட்டிபோட்டு விட்டு வீட்டிற்குள் இருந்த 2 1/4 கிலோ எடையுள்ள வெள்ளி பிள்ளையார் சிலையை கொள்ளையடித்து சென்றனர்.



இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் மதுரை மேலூரை சேர்ந்த நாகராஜன்(46). சிவகங்கை பாகனேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற சரவணன்(39), திருவிடை மருதூரை சேர்ந்த ரமணி(47), கும்பகோணத்தை சேர்ந்த இளைய ராஜா(29), பெரம்பலூரை சேர்ந்த ஜெய்சங்கர்(39), மதுரை செல்லூரை சேர்ந்த ராமச்சந்திர பிரபு(41) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. .வழக்கை நீதிபதி கோவிந்தராஜூலு விசாரித்து 5 வருட ஜெயில் தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 வருட ஜெயில் தண்டனையும், அபராத தொகையாக ரூ. ஆயிரமும் விதித்து அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

source : Dinamalar