Nagaratharonline.com
 
செட்டிநாட்டு தீபாவளி பலகார ஆர்டர் குவிகிறது  Oct 5, 16
 
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண்ணைய், கையினால் பிசையப்படும் மாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், செட்டிநாடு பலகாரங்களான சீப்பு சீடை, கைமுறுக்கு, அதிரசம், மணகோலம், தட்டை, மாவுருண்டை, பிரண்டை முறுக்கு, இனிப்பு சீடை ஆகியவற்றுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மவுசு உண்டு. அதிலும், தீபாவளி நேரத்தில் இவற்றின் விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு பெருகும். தற்போது செட்டி நாட்டின் அங்கமான காரைக்குடி, கோட்டையூரில் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.

அரசியல்வாதிகள், நடிகர்கள்,நடிகைகள் இங்கு வரும்போது செட்டிநாட்டு பலகாரங்களை சுவைக்க மறப்பதில்லை. அதன் வெளிப்பாடு, சென்னை சென்றபோதும், தீபாவளி நேரங்களில் செட்டிநாட்டு பலகாரத்தையை விரும்புகின்றனர்.

கோட்டையூரில் கடந்த 22 ஆண்டுகளாக செட்டிநாடு பலகார தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மெய்யம்மை ராமசாமி கூறும்போது: ஒரு முறை பயன்படுத்தும் எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்துவதில்லை. இதனால், ஆறு மாதம் ஆனாலும், எண்ணெய் வாசம் வராது. எவ்வளவு சாப்பிட்டாலும், மற்ற பலகாரங்கள் போல் திகட்டாது. இதற்கு மூலப்பொருள்களாக பருப்பு, உளுந்து, வெல்லம், பொரிகடலை, எண்ணெய், தேங்காய் ஆகியவை உள்ளது. கடந்த ஆண்டு விற்ற விலையே இந்த ஆண்டும் தொடர்கிறது. ஒரு கிலோ சீப்பு சீடை ரூ.240. ஒரு முருக்கு ரூ.7. அதிரசம் ரூ.7. ஐந்து பலகாரங்கள் கொண்டு பாக்கெட் போடப்படுகிறது. இங்குள்ளவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இங்குள்ளவர்களால் வாங்கி அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், செட்டிநாட்டு பலகாரங்களின் விற்பனை அதிகரித்து தான் வருகிறதே தவிர குறையவில்லை. அதற்கு காரணம் தரம் மட்டுமே, என்றார். பலகாரம் வேண்டுவோர்: 04565 286 426 என்ற எண்ணில் அழைக்கலாம்.