Nagaratharonline.com
 
பொன்னமராவதி: அரசு அறிவித்தபடி மின்சாரம்  Mar 31, 10
 
பொன்னமராவதி: திருமயம் தொகுதியில் தமிழக அரசு அறிவித்தபடி மின்சாரம் வழங்க வேண்டும் என்று திருமயம் தொகுதி எம்எல்ஏ ராம.சுப்புராம் தமிழக முதல்வருக்கு நேரில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அறிவித்தபடி மின் நிறுத்தம் நடைமுறையில் இல்லாமல் நினைத்த நேரத்தில் மின் நிறுத்தம் செய்கின்றனர். மின்சார அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்கும்போது மேல் இடத்தில் இருந்து என்ன தகவல் வருகின்றதோ அதன்படிதான் செய்ய முடியும் என்கிறார்கள். இது சம்பந்தமாக கடந்த 24ம் தேதி பொன்னமராவதியில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் மறியல் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆர்டிஓ, மின்துறை அதிகாரிகள், தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் மீது தடியடி, போலீஸ் மீது கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடந்து போலீசார் 17 பேரை கைது செய்தனர். பின்னர் 25ம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
ஆகவே தமிழக முதல்வரும், துணை முதல்வரும், மின்துறை அமைச்சரும், உடனடியாக நடவடிக்கை எடுத்து திருமயம் தொகுதியில் திருமயம், அரிமளம், பொன்னமராவதி, காரையூர், புதுப்பட்டி பகுதிகளுக்கு தமிழக அரசு அறிவித்தபடி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் கொடுத்த மனுவில் கூறியுள்ளார்.


source : Dinamalar.