Nagaratharonline.com
 
புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு  Aug 20, 16
 
புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் 26-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவுக்கு சங்கத் தலைவர் ராம. அருணாசலம் செட்டியார் தலைமை வகித்தார்.

2016-18-ம் ஆண்டின் புதிய தலைவராக டி.கண்ணன், செயலாராக ஆர்.எம்.வீ. கதிரேசன், பொருளராக இளங்கோவீரப்பன், துணைத்தலைவராக ரா.லெட்சுமணன், இணைச் செயலராக கே.அண்ணாமலை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக 5 செயற்குழு உறுப்பினர்கள் ஆட்சி மன்றக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி, கெளரவ விருந்தினராக தொழிலதிபர் எம்.சி.என். மாணிக்கம் செட்டியார், காசிநாட்டுக்கோட்டை சத்திர மேலாண்மை கழகச் செயலர் ராம.வயிரவன், நகரத்தார் மகளிர் சங்கத் தலைவர் ரமாபசுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 13 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவியும், 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு விருது, முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

மேலும், விஜய ரெகுநாதபுரம் காசி விசாலாட்சி கோயில் திருப்பணிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடையும், சாலையில் திரியும் மனநலம் குன்றியவர்களுக்கு தினமும் உணவு கொடுத்து உடை மாற்றி மருந்துகள் கொடுத்து வரும் மதுரையில் உள்ள சுரபி அறக்கட்டளைக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.