Nagaratharonline.com
 
மலேஷியா, சிங்கப்பூரில் தைப்பூசம்:  Jan 24, 16
 
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோவிலில், நடந்த தைப்பூச திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பத்து மலைக்கு பாத யாத்திரையாக வந்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதேபோல், பினாங்கில் உள்ள தண்ணீர் மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொடி மலை முருகன் கோவிலிலும், தைப்பூச விழா விமரிசையாக நடந்தது.

சிங்கப்பூரில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடங்கள் சுமந்தும், ஊர்வலமாக வந்தனர். சீன நாட்டை சேர்ந்தவர்களும், இந்த திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில், தைப்பூச விழாவின்போது, ஊர்வலத்திற்கும், ஒலிபெருக்கி வைக்கவும், பல ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இதுகுறித்து, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள், அரசிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 40 ஆண்டுகளாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் அனைத்தும், இந்த ஆண்டு தளர்த்தப்பட்டன. இதனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும், 'லிட்டில் இந்தியா' பகுதி முழுவதும், தோரணங்கள் கட்டப்பட்டு, ஒலி பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.