Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்  Jan 2, 16
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சாமி எழுந்தருளல் நடைபெற்றது.

குடவரைக் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் திருவனந்தல் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பக விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 5 மணியிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோயில் சுற்றுப்பிரகாரத்தை சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு நிழற்குடை அமைத்து குடிநீர்வசதி, மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி ராமநாதன் செட்டியார், காரைக்குடி தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.