Nagaratharonline.com
 
ப. சிதம்பரம் அண்ணன் வீட்டில் திருடியவர் கைது: 100 பவுன் தங்க நகை, 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுத  Dec 28, 15
 
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் அண்ணன் வீட்டில் திருடிய நபரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காரைக்குடிப் பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி. முத்தமிழ் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையினர் நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையின் போது சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாலகுமார் (48) என்பதும், செட்டிநாடு, பள்ளத்தூர், கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டில் கண்டனூரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் அண்ணன் ப. லெட்சுமணன் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவத்திலும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

பாலகுமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 100 பவுன் தங்கம், 40 கிலோ வெள்ளிப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.