Nagaratharonline.com
 
கவிதைக்கு புதிய வடிவம் தந்தவர் கண்ணதாசன்: ப.​ சிதம்பரம் புகழாரம்  Mar 14, 10
 
காரைக்குடி,​​ மார்ச் 14:​ படித்தவர்கள் மட்டுமல்ல,​​ படிக்காதவர்கள்,​​ கேள்வி ஞானத்தில் புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும் புரியும் வகையில் தமிழ்க் கவிதைக்கு புதிய வடிவம் தந்தவர் கவிஞர் கண்ணதாசன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் புகழாரம் சூட்டினார்.

​ சிவகங்கை மாவட்டம்,​​ காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற 21-ஆம் ஆண்டு கண்ணதாசன் விழாவில் கலந்துகொண்டு கவிஞர்கள் கண்ணதாசன்,​​ பாரதியார் உருவப்படங்களைத் திறந்துவைத்து அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:​ ​

​ ​ 55 வயதில் சரித்திரப் புகழை நாட்டி,​​ நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.​ எல்லோர் நாவிலும் பாடல்களைத் தவழச் செய்த சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் அவர்.​ ​

​ இலக்கியம்,​​ உரைநடை,​​ கவிதை,​​ நாடகம் என எதுவாக இருந்தாலும்,​​ காலத்துக்கு ஏற்ப அது அமைந்தால்தான் நிலைத்த இலக்கியமாக இருக்கும்.​ உதாரணமாக,​​ 60,​ 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாடக அமைப்பை தற்போது அப்படியே அரங்கேற்றினால்,​​ அதனைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்.​ காலத்திற்கேற்ப இலக்கியத்தின் முகம் மாற வேண்டும்.​ அப்படி முகம் மாறும்போது இலக்கியத் தரம் இல்லை என்று யாரும் உறுதி செய்ய முடியாது.

​ கவிதையைப் பொருத்தவரை பாரதியார்,​​ பாரதிதாசன் போன்றோர் தங்கள் காலத்துக் கேற்ப எழுத்து முறையை மாற்றிக் கொண்டதால்,​​ அவை நிலைத்து நிற்கின்றன.​ பாரதிதாசன் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.​ அவர்கள் காலத்துக்குப் பிறகு வந்த படித்தவர் மட்டுமல்ல,​​ படிக்காதவர்கள்கூட கேள்வி ஞானத்தையே நம்பியுள்ளவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ்க் கவிதைக்குப் புதிய வடிவம் தந்தவர் கண்ணதாசன்.​ பேச்சுவார்த்தையைக் கூட கவிதை வடிவாக்கினார்.​ பட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்குப் புரியும் வகையில்,​​ 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை,​​ கடைசி வரை யாரோ..​ என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன்.

​ ​ தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறை யாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​ கவிஞனுக்குச் சொந்த வாழ்க் கையில் குறைகள்,​​ நிறைகள் இருக்கலாம்.​ அது காலப்போக்கில் முடிந்து விடும்.​ நிலைத்து நிற்பது அவருடைய சாதனை,​​ எழுத்துகள்தான்.​ ​ ​ கண்ணதாசன் எழுத வேண்டும்,​​ டி.எம்.​ சௌந்தரராஜன் பாட வேண்டும்,​​ சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.​ அவரது பாடல்கள் நிலைத்திருக்கின்றன.​ கண்ணதாசன் இப் பகுதியில் பிறந்தவர் என்பது நமக்கு பெருமைக்குரியது.​ அவரை விஞ்சிய கவிஞன் சம காலத்தில் இன்னும் தோன்றவில்லை.​ கண்ணதாசனை ஞானக் கண்களாக ஏற்று பல கவிஞர்கள் தோன்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் அமைச்சர் ப.​ சிதம்பரம்.

​ ​ விழாவில் கவிஞர் அரு.​ நாகப்பன் வரவேற்றார்.​ முன்னாள் அமைச்சர் மு.​ தென்னவன் இலக்கிய உரையாற்றினார்.​ சத்தி.​ திருநாவுக்கரசு தலைமை வகித்துப் பேசினார்.​ ​

​ ​ ​ விழாவில்,​​ சட்டபேரவை உறுப்பினர்கள் என்.​ சுந்தரம்,​​ கேஆர்.​ ராமசாமி,​​ தொழிலதிபர் பிஎல்.​ படிக்காசு,​​ முத்து.​ பழனியப்பன்,​​ சுப.​ துரைராஜ்,​​ சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ்.​ மாங்குடி உள்ளிóடட பலர் கலந்து கொண்டனர்.