Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை இடிதாங்கிவீடு, முரு.பழ வகையறா ஆச்சிமார்கள் ஒருநாள் திருத்தல சுற்றுலா  Sep 29, 15
 
 
24/09/2015 அன்று நெற்குப்பை இடிதாங்கிவீடு, முரு.பழ வகையறா ஆச்சிமார்கள் 18 நபர்கள் இணைந்து, ஒருநாள் திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.

முதலில் மாணிக்கவாசகர் சிவபுராணம் பாடிய, ஆவுடையார்கோவில் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் ஆலயம் சென்று வழிபட்டனர்.

ஆலய சிறப்பு : மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.


பிறகு திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில்
சென்று, ஈசனை வழிபட்டு இறையருள் பெற்றனர்.

இவ்வூர் கோயிலுக்கு தெற்கே பாம்பாறும், கோயில் எதிரே 3 கி.மீ. தொலைவில் கடலும் உள்ளது. கடல் மற்றும் ஆற்றின் புனலில்(வாயிலில்) ஊர் இருப்பதால் "திருப்புனவாசல்' என்ற பெயர் ஏற்பட்டது.

தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோயில். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது.`தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது.
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது. இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார். லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டிகட்டப்படுகிறது. இதை வைத்து தான் "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது.

சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள்.

நிறைவாக, தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம் ,புதுக்கோட்டை அரைக்காசு அம்மன் ஆலயம் மற்றும் குமரமலை முருகன் கோவில் சென்று வந்தனர் ஆச்சிமார்களே, ஏற்பாடு செய்து, இனிதாக ஆன்மிக சுற்றுலாவை அமைத்துக்கொண்டது மிக சிறப்பு .