Nagaratharonline.com
 
NEWS REPORT: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்  Sep 10, 15
 
 
திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டி நகரத்தார் கோயிலில் அருள்மிகு கற்பக விநாயகருக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சதுர்த்திப் பெருவிழா நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேளதாளத்துடன் கொடி வலம் வந்தது. அதைத் தொடர்ந்து கொடி மரத்தில் கட்டப்பட்டு, முன்னால் வைக்கப்பட்டிருந்த அங்குச தேவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், பழங்கள் புனித நீர்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், 11.05 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புற்களால் சுற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயக உற்சவ மூர்த்தி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
வீதி உலாவின்போது, திருமறை பாராயணமும், திருமுறை பாராயணமும், நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.