Nagaratharonline.com
 
மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை முன்பதிவு ரத்து! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி  Mar 3, 15
 
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளைக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் மானியத் திட்டத்தில் இணைபவர்களுக்கு முன்வைப்புத் தொகை ரூ.568-ம், அந்தந்த மாதத்துக்கான மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, மானியம் பெற விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சந்தை விலையில் எரிவாயு உருளைகள் கிடைக்கும்.

நேரடி மானியத் திட்டத்தில் இதுவரை இணையாமல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு உருளை முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறியதாவது:

எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்து சுமார் 15 நாள்களுக்குப் பிறகு, "உங்கள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது; அதற்கான காரணத்தை முகவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்' என்று குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பப்பட்டது.

முகவரிடம் சென்று கேட்டதற்கு, நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த பின்னரே எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதே போன்று, பல்வேறு பகுதிகளிலும் நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு முகவர்கள் தரப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முகவர்களிடம் கேட்டபோது, "இதுவரை நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்கள் கடைசி நிமிஷத்தில் எங்களை அணுகினால் ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரையும் இந்தத் திட்டத்தில் இணைப்பது கடினமான பணி.

எனவேதான், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்த்து, அவர்களை இந்தத் திட்டத்தில் இணையுமாறு நினைவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.