Nagaratharonline.com
 
நெற்குப்பை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்  Jan 6, 15
 
நெற்குப்பை ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைமுத்து. சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா (வயது 25). இவர்களுக்கு 3 வயதில் பிரியதர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 4–ந்தேதி குழந்தையுடன் வெளியே சென்ற வெண்ணிலா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நெற்குப்பை போலீஸ் நிலையத்தில் தாமரைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான வெண்ணிலாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெற்குப்பை பஸ் நிலையத்தில் நேற்று குழந்தை பிரியதர்ஷினி தனியே நின்று அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரியதர்ஷினியை மீட்டு சிவகங்கையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

குழந்தையை விட்டு விட்டு தாய் வெண்ணிலா எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் விசாரணை நடத்தி மாயமான வெண்ணிலாவை தேடி வருகிறார்.