Nagaratharonline.com
 
வலையபட்டியில், நகை பறிப்பில் ஈடுபட்டஇருவர் கைது  Jun 23, 14
 
வலையபட்டியைச் சேர்ந்தவர் ஆர். உமாமகேஸ்வரி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கொப்பனாபட்டி பிரதான சாலையில் காவல் ஆய்வாளர் ஆர். கார்த்திகைசாமி, காவல் உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நாத்துப்பட்டியைச் சேர்ந்த எஸ். பாலசுப்பிரமணியன் (33), கொப்பனாபட்டியைச் சேர்ந்த எஸ். பெருமாள் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரித்ததில் வலையபட்டியில் ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகையையும், கொப்பனாபட்டியில் சுமதி என்பவரிடம் மூன்றரை பவுன் நகையையும் அவர்கள் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ஏழரை பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.