Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் "வருண ஜெபம்'  May 12, 14
 
நாட்டரசன்கோட்டை, சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரர் கோயிலில், மழை வேண்டி, சிவாச்சாரியார்கள் "வருண ஜெபம்' நடத்தினர்.

நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயிலில், மழை வேண்டி, நேற்று முன்தினம் மாலை, வருண ஜெப பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8:30 முதல் 11:30 மணி வரை, கோயில் வளாகத்தில் உள்ள தொட்டியில் நீர் நிரப்பி, சிவாச்சாரியார்கள் தொட்டிக்குள் இறங்கி, வருண ஜெப பூஜை செய்தனர். தொடர்ந்து பர்ஜன்ய சாந்தி நடத்தப்பட்டது. சுவாமி, அம்பாள் சன்னதி முன், 15 கும்பங்கள் வைத்து சிறப்பு வேள்விகள் நடத்தி, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. "சாகம்பரி' அலங்காரத்தில், சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிவாச்சாரியார் கண்ணன் தலைமையில், சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை, ஆவிச்சி செட்டியார் வகையறாக்கள் செய்திருந்தனர்.