Nagaratharonline.com
 
NEWS REPORT: அட்சய திருதியை அன்று இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவருக்கு பரிகாரம்  May 2, 14
 
அட்சய பைரவர் வழிபாட்டு பரிகாரம் பொதுவாக பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால் இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார்.

இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. சித்தர்களில் ஒருவரான கொங்கனார், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு "சுயம்பிராசேஸ்வரர்'' என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன.

இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலயத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை'' இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.

source : maalaimalar