Nagaratharonline.com
 
கொன்னைப்பட்டி மக்கள் கொன்னையூரில் சாமி தரிசனம்  Jan 15, 10
 
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி ஊர் பொதுமக்கள் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலில் அமைதியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுகை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டி, கொன்னைப்பட்டி தனித்தனி ஊராட்சியாகும். கொப்பனாப்பட்டி ஊராட்சிக்கும், கொன்னைப்பட்டி ஊராட்சிக்கும் நீண்ட காலமாகவே ஊராட்சியின் எல்லை பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில் கொன்னைப்பட்டி பொதுமக்கள் மாட்டு பொங்கல் அன்று கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்ட பின் மாட்டுப்பொங்கல் மஞ்சு விரட்டு நடத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த வருடம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலுக்கு கொன்னைப்பட்டி மக்கள் வந்த போது கொன்னைப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கும், கொப்பனாப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சு நடத்திய போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மாட்டுப்பொங்கலான நேற்று(15ம் தேதி) கொனைப்பட்டி மக்கள் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் அமைதியாக சாமி கும்பிட்டு சென்றனர். ஆர்டிஓ பாஸ்கரன், எஸ்பி மூர்த்தி, பொன்னமராவதி டிஎஸ்பி முத்தையா, பொன்னமராவதி தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் காடப்பன், வருவாய் ஆய்வாளர் சாமிக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், கலிவரதன், பாலகுரு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இது குறித்து பாதுகாப்பு பணியில் மேற்பார்வை செய்த எஸ்பி மூர்த்தி கூறியது@ கடந்த ஆண்டை போல பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதற்காக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றார்.

source : Dinamalar