Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர் எஸ்.வி.கலாசாலை பள்ளியில் பாடப்பிரிவு நிறுத்தம்:மாணவர்கள் போராட்டம்  Dec 2, 13
 
ஆ.தெக்கூர் எஸ்.வி. கலாசாலை மேல்நிலைப்பள்ளி மேல்நிலை வகுப்பில், "ஜெனரல் மெஷினிங் ' பாடப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆ.தெக்கூர் எஸ்.வி.கலாசாலை மேல்நிலைப்பள்ளியில், "ஜெனரல் மெஷினிங்' (குரூப்-4) பிரிவில், பிளஸ் 1 ம் வகுப்பில் 37 பேர்; பிளஸ் 2 வகுப்பில் 31 பேர் படிக்கின்றனர்.கடந்த 2000 ம் ஆண்டுக்கு முன், மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பின், புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியரே வகுப்பு எடுக்கிறார்.

சமீபத்தில், பல லட்சம் செலவில் இப்பாடப்பிரிவு உபகரணங்கள், நிர்வாகத்தினரால் வாங்கப்பட்டன. இந்நிலையில், நவ., 30 ல், "இந்தப் பாடப்பிரிவு, நமது பள்ளியில் ரத்தாகி விட்டது. மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு, திருப்புத்தூர், சிங்கம்புணரி பள்ளிகளில் சேர்ந்து கொள்ளலாம்' என, பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். பின், இடைத்தேர்வு எழுத வைக்கப்பட்டனர்; தேர்வு முடிந்த பின், பள்ளி வாசலில் அமர்ந்து எதிர்ப்பை
தெரிவித்தனர். வருவாய்த்துறையினர், போலீசார், கிராமத்தினர் சமரசம் செய்த பின், மாணவர்கள் கலைந்து சென்றனர்.