Nagaratharonline.com
 
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி  Nov 7, 13
 
சிக்கலில் உள்ளது அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவில். இக்கோவில் இறைவியின் திருப்பெயர் வேல் நெடுங்கண்ணி. இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பவர் அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவர்.

முருகப் பெருமானின் அவதார நோக்கமாகக் குறிப்பிடப்படும் சூரசம்ஹாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, தனது அன்னையிடமிருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்ற திருத்தலம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி திருக்கோவில் என்பது ஐதீகம். சிக்கல் திருத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்ற முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது கந்தப் புராணம்.

முருகப்பெருமான், தாய் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு ஐதீக முறைப்படி இன்னிசை முழக்கங்களுடன் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, சூரனை சம்ஹாரம் செய்ய சினம் கொண்டு, தாயிடமிருந்து சக்திவேல் பெற்ற சிங்காரவேலரின் திருமேனியில் வியர்வை பொழியும் ஆன்மிக அற்புத நிகழ்வு நடைபெற்றது.