Nagaratharonline.com
 
திருமயம் அருகே பெல் தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் வருகை  Jul 29, 13
 
திருமயம் அருகே பெல் தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் வருவதையொட்டி சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டி கிராமத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வரும் ஆகஸ்ட் 2-ல் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன்சிங் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.40 மணிக்கு திருமயம் வருகிறார். இவ்விழாவையொட்டி தொழிற்சாலையின் பின்புறம் உள்ள தனியார் நிலத்தில் 3 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி) அதிகாரி அனினூத் ஜங்கிட் தலைமையில் 8 பேர் கொண்ட குழு திங்கள்கிழமை திருமயம் வந்தது. அங்குள்ள 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்களையும், அங்கிருந்து விழா மேடைக்கு பிரதமரின் கார் செல்லக்கூடிய தார்ச் சாலையையும் ஆய்வு செய்தனர்.