Nagaratharonline.com
 
NEWS REPORT: வருமான வரி ரீபண்ட்டை இழுத்தடிக்கிறாங்க: எப்படி புகார் செய்வது?  May 22, 13
 
வருமான வரி ரீஃபண்ட் கிடைக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? தாமதமான அல்லது மறந்தே போயிருக்கக்கூடிய ரீஃபண்ட் பற்றிய உங்கள் குறைகளைப் பற்றி புகார் அளிக்க நீங்கள் வருமான வரி குறைதீர்ப்பாணையத்தை அணுகலாம்.

வருமான வரி குறைதீர்ப்பாணையம், வருமான வரி ரீஃபண்ட் மனக்குறைகள் மட்டுமல்லாது பல்வேறு வகைப் பிரச்சினைகளையும் கையாள்கிறது. இப்பிரச்சினைகள் வட்டி விலக்கு மனுக்கள், மேல்முறையீடு உத்தரவுகளின் நிறைவேற்றம், மனுக்களில் பிழைதிருத்தங்கள் செய்தல், கையகப்படுத்தப்பட்ட அகௌண்ட் புத்தகங்களின் வெளியீடு, பான் ஒதுக்கீடு, பான் கார்டுகளை வழங்குதல், கட்டிய வரி கிரெடிட் ஆகாமை போன்ற ஏதாவதொன்றாக இருக்கலாம்.
நீங்கள் குறைதீர்ப்பாணையத்தை அணுகும் முன், எழுத்து வடிவில் உங்கள் புகாரை உங்கள் வருமான வரி அதிகாரியிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். நீங்கள் அளித்த புகார் உங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் கையாளப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், அல்லது உங்கள் புகார் குறிப்பிட்ட அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டால், அல்லது உங்கள் புகாரை சமர்ப்பித்தபின் வருமான வரி அலுவலரிடமிருந்து 30 நாட்களுக்குள் அதற்கான பதில் மொழி எதுவும் வராவிட்டால் மட்டுமே இந்த பிரச்சினையை நீங்கள் குறைதீர்ப்பாணையத்துக்குக் கொண்டு செல்ல இயலும். வருமான வரி அலுவலரிடமிருந்து பதில் வருவதற்கு 30 நாட்கள் காத்திருந்த பின் ஒரு வருடத்திற்குள் குறைதீர்ப்பாணையத்தில் உங்கள் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம்.
நீங்கள் ஆன்லைனிலும் உங்கள் புகாரை சமர்பிக்கலாம். அவ்வாறு சமர்பிக்கும் பட்சத்தில் அதனை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் கையொப்பமிட்ட பின் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். புகாரில் பின்வருவனவற்றை தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியம்.

1) புகார் அளிப்பவரின் பெயர், முகவரி மற்றும் பான் நம்பர்
2) புகார் சுமத்தப்படும் அலுவலரின் பெயர் மற்றும் பதவி
3) புகார் அளிப்பதற்கு அடிப்படையாக இருந்த உண்மைகள் - அதனை நிரூபிக்கக்கூடிய துணை ஆவணங்கள்.