Nagaratharonline.com
 
செட்டிநாடு வீடுகள் புதுப்பிப்பு  Mar 2, 13
 
வெளிநாட்டு பயணிகளை வரவேற்க, செட்டிநாடு வீடுகள்,பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, தங்கும் குடில்களாகவும்,அருங்காட்சியகமாகவும் மாற்றப்படுகிறது.

காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கொத்தமங்கலம், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில், நூற்றாண்டுகளை கடந்த, செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க வீடுகள் உள்ளன. பர்மா தேக்கு, தூண்கள், இத்தாலியன் டைல்ஸ், உயர்தர கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டது என, கலாச்சாரம் மாறாமல் கட்டப்பட்டவை. 10 ஆயிரம் சதுர அடியில் இருந்து, 80 ஆயிரம் சதுரடி வரை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு தெருவில் தொடங்கும் வாசல், மறு தெருவில் முடியும் அளவு, வீடுகளின் நீளம் உள்ளது.நகரத்தார்களின் வெளிநாட்டு வாணிபம், உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான வீடுகளில், காவலுக்கு மட்டுமே பணியாளர்கள் உள்ள நிலைமை உள்ளது. கானாடுகாத்தான் அரண்மனை மற்றும் ஆயிரம் ஜன்னல் வீடுகளை, பார்க்க வெளியாட்களுக்கு அனுமதி இல்லாததால், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள், திரும்பி செல்லும் நிலைமை உள்ளது.செட்டிநாட்டு கலாச்சாரத்தை, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், என்ற வகையில், பழமையான வீடுகள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பல வீடுகள் குடில்களாக மாற்றப்பட்டு, வெளிநாட்டு பாணியில், அறைகள் அமைக்கப்படுகின்றன.

கோட்டையூரில் சுற்றுலாத்துறை சார்பில், செட்டிநாட்டு வீடு விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. இதே போல் கொத்தமங்கலத்தில், செட்டிநாட்டு பாராம்பரியமிக்க வீட்டில், பிரெஞ்ச் முறைப்படி, கண்ணாடியால் ஆன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல வீடுகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.