Nagaratharonline.com
 
எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா  Sep 15, 09
 
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கியா மலைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தூரம் ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, அதில் சீனா என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.


22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் கியா மலை அமைந்துள்ளது.


இங்கு, ஜுலுங் லா கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர், மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தைப் பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.


கடந்த ஜூனில் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.


இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


ஒருபுறம் சீனா, இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மறுபுறம் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானையாவது எதிரி நாடு என இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால், சீனாவை இந்திய அரசு அப்படி நினைத்துப் பார்ப்பதில்லை.


அதன் பலனைத்தான் 1962-ல் இந்தியா அனுபவித்தது. 1950-களில், காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சாய் சினை (சுமார் 37 ஆயிரம் சதுர கி.மீ.) தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டுவந்தது.


அத்துடன், ஜின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையில் 1951-ல் அக்சாய் சினில் சீனா சாலை போட்டது. சீனா இப்படி ஒரு சாலை போட்டதை 1957-ல் தான் இந்தியா தெரிந்து கொண்டது.


இந்தியாவின் பகுதிகளான அருணாசலப் பிரதேசம் (இதை தெற்கு திபெத் என சொல்கிறது சீனா), சிக்கிம், அசாமின் சில பகுதிகளை சீனா தனது என உரிமை கொண்டாடி வருகிறது.


இப்படிப் பிரச்னைகள் இருந்தபோதும், எல்லைகள் குறித்து இந்தியாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை என தொடர்ந்து சீனா கூறிவந்தது. 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை வகுத்து அதன்படி இருநாடுகளும் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் என அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முழங்கினார்.


ஆனாலும், தொடர்ந்து தனது வரைபடங்களில் இந்தியாவின் 1.20 லட்சம் சதுர கி.மீ. பகுதியை சேர்த்தே சீனா வெளியிட்டது.


1959-ல் திபெத்தில் போராட்டம் வெடித்தபின் இந்தியாவில் தஞ்சம்புகுந்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இருநாடுகள் இடையேயான உறவைப் பாதித்தது.


அக்சாய் சின் அனுபவம் காரணமாக, இந்தியா தனது பகுதியைப் பாதுகாக்க 1962 ஜூனில் எல்லையில் படைகளைக் குவித்தது. இருபுறமும் பதற்றம் அதிகரித்தது.


இந்நிலையில், 1962 அக்டோபர் 3-ம் தேதி புது தில்லிக்கு விஜயம் செய்த சீனப் பிரதமர் சூ யென்லாய் இந்தியாவுடன் போர் கிடையாது என அறிவித்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் போர் வெடித்தது. இந்தியத் தரப்பில் 3,128 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3,123 வீரர்கள் சீன ராணுவத்திடம் பிடிபட்டனர்.


சர்வதேச நெருக்கடி அதிகரித்ததையடுத்து நவம்பர் 20-ம் தேதி போர் நிறுத்தத்தை சீனா தன்னிச்சையாக அறிவித்தது. தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததாலும், எதிரியை சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் இந்தப் போரில் இந்தியா தலைகுனிவைச் சந்தித்தது.


தற்போதும், முன்பிருந்ததைப் போன்றே சூழ்நிலை உள்ளது.


சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக மாறிவருவதைச் சீனாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக மாறினால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலுக்கு அதிக மதிப்பு ஏற்படும் என்பதை சீனா அறிந்து வைத்துள்ளது.


அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை ஆக்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவுதந்த போதிலும் சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது.


இந்தியாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவைக் குறைந்தது 20 நாடுகளாக உடைக்க வேண்டும் என அண்மையில் சீன இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு, நமது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சென்று வந்தால், சர்ச்சைக்குரிய பகுதி அது என சீனா அங்கலாய்க்கிறது.


இந்தியாவை தனது எதிரியாகவே கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் சீனா செய்து வருகிறது.


விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்கு உதவி செய்து, அங்கு கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ள சீனா வழிவகை செய்து கொண்டுவிட்டது.


நேபாளத்தில் தனது சீடர்களை (மாவோயிஸ்டுகள்) வளர்த்துவிட்டு அங்கும் தனது மேலாண்மையை சீனா நிலைநிறுத்தி உள்ளது.


உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் மீதான தாக்குதலில் கூட சீன மாவோயிஸ்டுகளின் பின்னணி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


சீனாவில் இரும்புத் திரை ஆட்சி நடந்து வருவதால் அது எந்த அளவுக்கு அணுகுண்டுகளையும், ஆயுதங்களையும் பெருக்கிவைத்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.


இப்போது ஹெலிகாப்டர் அத்துமீறல், இந்திய எல்லைக்குள் புகுந்து மலைப்பகுதிகளில் சீனா என எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.


வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் மீண்டும் அதையே அனுபவிக்க நேரிடும். இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகளில் கால் பதித்துள்ளதுடன் எல்லைகளிலும் இந்தியாவுக்கு பிரச்னைகளை சீனா உருவாக்கி வருகிறது.


இந்தச் சூழ்நிலையில், சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்திவந்தாலும், 1962-ல் ஏமாந்தது போல மீண்டும் ஒரு முறை ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamani 9th sep 2009