Nagaratharonline.com
 
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது  Jul 15, 12
 
குற்றாலத்தில் சாரல் மழை ஏமாற்றி வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.குற்றாலத்தில் சீசன் துவங்கி ஓரிரு நாட்கள் மட்டும் சாரல் மழை பொழிந்து சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து சாரல் மழை ஏமாற்றி வருகிறது. நேற்று முன்தினம் இரவு லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் நேற்று காலையில் வெயில் தலைகாட்டியது. தென்றல் காற்று சுழற்றி சுழற்றி வீசியதால் வெயிலின் கடுமை தெரியவில்லை.

சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நீண்ட வரிசையில் நின்றனர். பெண்கள் பகுதியில் தண்ணீர் மிக குறைவாக விழுந்ததால் ஆண்கள் பகுதியில் அவ்வப்போது பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஐந்தருவி பகுதியில் குளு குளு நிலைமை நீடித்தது சுற்றுலா பயணிகளுக்கு ஆறுதல் அளித்தது.