Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோவிலில் வைகாசி உற்சவ விழா துவக்கம்  May 27, 12
 
மானாமதுரை,மே 27: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வைகாசி உற்சவ விழா தொடக்கமாக கோவிலில் அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் காலை 10.45 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன.
இரவு கோயிலில் சங்காபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவ விழாவை முன்னிட்டு விழா நாட்களில் தினமும் கண்ணுடைய நாயகி அம்மன் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தங்கரத உற்சவம் ஜூன் 1-ம் தேதியும், மறுநாள் 2-ம் தேதி 8 ஆம் நாள் விழாவில் கண்ணுடைய நாயகி அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவாக ஜூன் 3-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
4-ம் தேதி காலை பூரண உற்சவம் மற்றும் பால்குடம் எடுத்து வருதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Source:Dinamani