Nagaratharonline.com
 
நட்ட பயிருக்கு தண்ணீர் இல்லை பரிதவிக்கும் விவசாயிகள்  Dec 11, 09
 
நெற்குப்பை பகுதி கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால், மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.எதிர்பார்த்த மழை இல்லாததால் மணிமுத்தாறு பாசன விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பெய்த சிறிதளவு மழையை நம்பி விவசாயத்தில் இறங்கியவர்கள் பாடு திண்டாட்டமாகி வருகிறது.நெற்குப்பையில் பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். கிணறு பாசனம் உள்ளவர்கள் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மற்றவர்கள் கிணற்று நீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றுகின்றனர். ஒழுகமங்கலத்தில் கிணறு, கண்மாயில் போதிய தண்ணீர் இல்லை.

இதனால் விவசாயிகள் கண்மாய் நீரை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். சூரக்குண்டு கண்மாயில் இருந்து தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் எடுத்து வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். விவசாயி திருமேனி கூறுகையில், ""மழை இல்லாததால் இங்கு பாதி அளவு கூட நடவு இல்லை. ஆவணியில் கை விதப்பு நட்டோம். பயிருக்கு தண்ணீர் தேவை. இதனால் கண்மாயில் உள்ள சிறிதளவு தண்ணீரை பம்ப் செட் மூலம் பாய்ச்சுகிறோம். ஒரு முறை பாய்ச்ச 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த தண்ணீரும் சில நாள் தான் இருக்கும். மார்கழிக்குள் மழை இல்லாவிட்டால் பயிர் தாங்காது,'' என்றார்.கிருஷ்ணன் கூறுகையில்," "இன்னும் ஒரு தண்ணீருக்கு, கண்டிப்பாக மழை தேவை. இல்லாதபட்சத்தில் விளைச்சல் இருக்காது,'' என்றார்.

source : Dinamalar 11/12/09