Nagaratharonline.com
 
பனையபட்டியில் ஐ.ஓ.பி. கிளை திறப்பு  Mar 26, 12
 
புதுக்கோட்டை, மார்ச் 25: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பனையபட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று, வங்கிக் கிளையைத் திறந்துவைத்த மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசியது:

திருமயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராமின் தீவிர முயற்சியால், மாவட்டத்தின் 14-வது கிளை இங்கு தொடங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே வங்கிகள் திறக்கப்படுகின்றன.

சாமானிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதற்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. வங்கிகளில் கடன் பெற்றவர்கள், அதை நேர்மையாகத் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே அடுத்தவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியும் என்றார் சிதம்பரம்.

விழாவில் புதுகையைச் சேர்ந்த 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 29.25 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம், வங்கி மேலாண்மை இயக்குநர் ஏ.கே. பன்சால், மண்டல முதன்மை மேலாளர்கள் மதுரை கே.எம். திருநாவுக்கரசு, காரைக்குடி எஸ். பாலச்சந்திரன், கிளை மேலாளர் எஸ். கோபால், ஊராட்சித் தலைவர் சி. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source:Dinamani