Nagaratharonline.com
 
கண்டனூர் - புதுவயல் ரயில் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றமில்லை  Feb 11, 12
 
காரைக்குடி, பிப். 8: காரைக்குடி அருகே கண்டனூர் - புதுவயல் ரயில் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்செய்யும் யோசனை தென்னக ரயில்வேக்கு இல்லை என்ற தகவலை தனக்கு தந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காரைக்குடியில் உள்ள அவரது எம்.பி. அலுவலகத்துக்கு அமைச்சர் புதன்கிழமை பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதுவயல் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், பேரூராட்சி மன்றம் மூலமாக கண் டனூர் - புதுவயல் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்று என்னிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து நான் ஜன.4-ந் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எனக்கு எழுதிய பிப். 2-ம் தேதியிட்ட பதில் கடிதத்தில், நடைபெற்றுவரும் அகல ரயில்பாதை மாற்றத்தின்போது கண்டனூர் - புதுவயல் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது நிலையத்தின் தரத்தைக் குறைக்கவோ எந்த யோசனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பதை சிவகங்கை மாவட்டப் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source:Dinamani