Nagaratharonline.com
 
காரைக்குடி நகைக்கடையில் 200 பவுன் நகைக் கொள்ளை... வெள்ளியை தொடவே இல்லை!!  Nov 26, 11
 
காரைக்குடி: காரைக்குடியில் பூட்டப்பட்டிருந்த நகைக்கடையில் இருந்த 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். வெள்ளி நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஆனந்த். பள்ளத்தூரை அடுத்த பழையூரில் வசித்து வருகிறார். இரவில் நகைக்கடையை பூட்டிவி்ட்டு ஆனந்த் வீட்டுக்கு சென்று விடுவார்.

நேற்று காலை 9.30 மணிக்கு ஆனந்த் வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் கதவுகள் மட்டும மூடிய நிலையி்ல் இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த், கடைக்குள் சென்று பார்த்த போது, எல்லா கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.

கடை லாக்கருக்குள் வியாபாரத்துக்காக வைத்திருந்த நகைகள், அடகு வந்த நகைகள் என்று ரூ.50 லட்சம் மதிப்புள்ள 200 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் தங்க நகைகளின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் எதையும் கொள்ளையர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஆனந்த் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.